மு.க.ஸ்டாலின், விஜய் சந்திப்பை அரசியலாக்குவது அறியாமை - உதயநிதி விளக்கம்
சென்னை:
முரசொலி செல்வத்தின் பேத்தி நிச்சயதார்த்த நிகழ்ச்சி சில தினங்களுக்கு முன்பு நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் தனது மனைவியுடன் கலந்து கொண்டார். தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், பொருளாளர் துரைமுருகன் ஆகியோருடன் விஜய் இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின.
முக.ஸ்டாலினும், விஜயும் சந்தித்து பேசிக் கொண்டதாக செய்திகள் வெளியாகி அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் ஜெயக்குமார், “அ.தி.மு.கவின் வாக்கு வங்கி உயர்ந்துள்ளது. இதைப் பார்த்து தி.மு.க கலங்கியுள்ளது. நடிகர் விஜய், தி.மு.கவுடன் சேர்ந்தால் தாராளமாக சேரட்டும்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், விஜயை சந்தித்து பேசியதன் காரணமே அ.தி.மு.கவின் வாக்கு சதவிகிதம் உயர்ந்துள்ளதை சரிசெய்வதற்காக இருக்கலாம்” என்றார்.
விஜய் மு.க.ஸ்டாலின் சந்திப்பு அரசியலாக்கப்பட்டதை அடுத்து நடிகரும் தி.மு.க. இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எங்களது குடும்ப விழாவுக்காக விஜய் வந்திருந்தார். அது ஒரு எதார்த்தமான சந்திப்பு தான். அதை அரசியலாக்குவது ஒரு அறியாமை தான்” என்று கூறியுள்ளார்.