காரிமங்கலம் அருகே கோவில் பூட்டை உடைத்து உண்டியலில் நகை-பணம் கொள்ளை
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலத்தை அடுத்துள்ள கோவிலூரில் சென்ன கேசவபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு காலை, மாலை இரு வேளைகளிலும் பூஜைகள் செய்வது வழக்கம்.
இதையடுத்து இன்று காலை பூசாரி கோவிலை திறக்க வந்தார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து எடுத்து சென்றது தெரியவந்தது. உடனே அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.
இது குறித்து காரிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொள்ளை நடந்த கோவிலை பார்வையிட்டனர். அப்போது மர்ம நபர்கள் இரவில் நோட்டமிட்டு கோவில் பூட்டை உடைத்து உண்டியலை எடுத்து சென்றது தெரிய வந்தது. திருடப்பட்ட உண்டியலை கோவில் பின்புறத்தில் உடைத்து நகை, பணத்தை கொள்ளையர்கள் திருடி விட்டு சென்றுள்ளனர். கோவிலில் சி.சி.டி.வி கேமிரா உள்ளது. அதனை வைத்து கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று போலீசார் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.