செய்திகள்
சண்டே மார்க்கெட் இடம் மாற்றப்படும்- நாராயணசாமி உறுதி
சண்டே மார்க்கெட் இடம்மாற்றம் செய்யப்படும் என்று முதல்வர் நாராயணசாமி சட்டசபையில் கூறியுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை சட்டமன்றத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் அன்பழகன் புதுவை நகர பகுதி முழுவதும் சாலை, நடைபாதை ஆக்கிரமிப்புகளால் ஏற்படும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு மற்றும் ஆக்கிரமிப்பை அகற்றும் அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பின்மை குறித்து ஒரு கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து பேசினார்.
இதற்கு பதிலளித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-
ஆக்கிரமிப்பு அகற்றும் விஷயத்தில் பாரபட்சம் காட்ட மாட்டோம். ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சண்டே மார்க்கெட்டால் அரசுக்கு வருமானம் கிடையாது.
வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள்தான் தொழில் செய்கின்றனர். ரூ.பல லட்சம் முதலீடு செய்து தொழில் செய்யும் வணிகர்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் நிறுவனத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. மிஷன் வீதி அதிதி ஓட்டல் அருகில் இருந்து ரெயில்வே நிலையம் வரை சண்டே மார்க்கெட் நீண்டுள்ளது. இதை வேறு இடத்திற்கு மாற்ற முடிவு செய்துள்ளோம் என்று கூறினார்.