ரங்கசாமியின் நம்பிக்கையில்லா தீர்மானத்தை திருப்பி அனுப்பி விட்டோம்- சபாநாயகர் தகவல்
புதுச்சேரி:
புதுவை சட்டசபையில் பட்ஜெட் மீதான உரை மீது விவாதம் இன்று நடந்தது. விவாதத்தில் அ.தி.மு.க., உறுப்பினர் அன்பழகன் பேசி முடித்தபோது, எதிர்க்கட்சித்தலைவர் ரங்கசாமி அளித்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை சபையில் விவாதத்திற்கு எப்போது எடுப்பீர்கள்? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் சிவக்கொழுந்து, எதிர்கட்சித்தலைவர் அளித்த தீர்மானம் முறைப்படி இல்லாததால் அதனை திருப்பி அனுப்பி விட்டோம் என கூறினார்.
அப்போது என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் ஜெயபால் குறுக்கிட்டு, எதிர்க்கட்சிகள் கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை எடுத்துக் கொள்வீர்களா? என கேள்வி எழுப்பினார். சபாநாயகர் சட்ட விதிகளின் படி நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதையடுத்து எதிர்க் கட்சிகள் சபாநாயகர் பதிலில் திருப்தி இல்லை என்று கூறி சபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜனதா உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக வெளியேறினர்.