செய்திகள்
விநாயகர் சிலைகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலம்: முத்துப்பேட்டை பகுதியில் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

Published On 2019-09-03 10:14 GMT   |   Update On 2019-09-03 10:14 GMT
முத்துப்பேட்டை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
முத்துப்பேட்டை:

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் வருகிற 6-ந் தேதி இந்து முன்னணி சார்பில் 27-ம்ஆண்டு விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெறுகிறது.

இந்த ஊர்வலத்தில் ஜாம்புவானோடை, வடக்காடு, உப்பூர், தில்லை விளாகம், அரமங்காடு, ஆலங்காடு உள்பட 19 பகுதிகளில் இருந்து விநாயகர் சிலைகள் எடுத்து வரப்படுகிறது.

முன்னதாக அன்று மதியம் 2 மணிக்கு தொடங்கும் ஊர்வலம் ஜாம்புவானோடை வடக்காடு சிவன் கோவில் இருந்து புறப்பட்டு வைரவன்சோலை, ஜாம்பு வானோடை தர்ஹா, மேலக்காடு, கோரை ஆற்றுபாலம் பகுதி வழியாக முத்துப்பேட்டை ஆசாத்நகர் சென்று அங்கிருந்து திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம் சென்று அங்கிருந்து பதற்றமான பகுதியாக கருதப்படும் பட்டுக்கோட்டை சாலையில் உள்ள நியூபஜார், கொய்யா முக்கம், பங்களாவாசல் வழியாக செம்படவன்காடு சென்று அங்குள்ள பாமினி ஆற்றில் மாலை 6 மணிக்கு கரைக்கப்படுகிறது.

முத்துப்பேட்டை பதட்டம் நிறைந்த பகுதி என்பதால் ஊர்வலத்தில் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க சுமார் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடபோவதாக கூறப்படுகிறது.

மேலும் முத்துப்பேட்டை முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பட்டுக்கோட்டை சாலை, மன்னார்குடி சாலை, திருத்துறைப்பூண்டி சாலை, வேதாரண்யம் சாலை ஆகிய பகுதிகளில் ஏற்கனவே இருந்த சோதனை சாவடிகளில் அல்லாமல் தற்காலிக சோதனை சாவடிகளும் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பணியில் போலீசார் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று விநாயகர் சிலைகள் ஊர்வல பாதையை தஞ்சை சரக டி.ஐ.ஜி லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

பின்னர் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் முத்துப்பேட்டை டி.எஸ்.பி. இனிகோ திவ்யன், முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினர்.

Tags:    

Similar News