செய்திகள்
குமரியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு போலீஸ் பாதுகாப்பு
குமரி மாவட்டத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த போலீசார் தடை விதித்துள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்து முன்னணி, இந்து மகாசபா, சிவசேனா மற்றும் இந்து அமைப்புகள் சார்பில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
2 அடி முதல் 10 அடி வரை உயரம் உள்ள விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் காலை, மாலை நேரங்களில் பூஜை செய்யப்பட்டு வருகிறது. பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு இன்று காலையில் தீபாராதனை காண்பிக்கப்பட்டது. கொழுக்கட்டை படைத்தும், அவல் பொரி படைத்தும் விநாயகரை வழிபட்டு வருகிறார்கள். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளுக்கு போலீசார் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
சுமார் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள விநாயகர் சிலைகளை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்த போலீசார் தடை விதித்துள்ளனர். பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை கரைப்பதற்கு கன்னியாகுமரி, சங்குத்துறை பீச், பள்ளிகொண்டான் அணை, குழித்துறை ஆறு உள்பட 11 இடங்களில் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
விநாயகர் சிலை ஊர்வலம் 6, 7, 8-ந்தேதிகளில் நடக்கிறது. விநாயகர் ஊர்வலத்திற்கு போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். மினி லாரி மற்றும் டிராக்டர்களில் கொண்டு சென்று சிலைகளை கரைக்க வேண்டும். பட்டாசுகள் வெடிக்கக் கூடாது. விநாயகர் சிலைகளுக்கு அணிவிக்கப்பட்ட பூ மற்றும் மாலைகள், துணிகள், அழகு சாதனப்பொருட்களை கரைக்கப்படுவதற்கு முன்பு பிரிக்க வேண்டும்.
போலீசார் அனுமதித்த வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண்டும் என்பது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர்.