செய்திகள்
அமைச்சர் எம்ஆர் விஜயபாஸ்கர்

ஒரு ஆண்டில் 24 சதவீதம் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளது- அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தகவல்

Published On 2019-08-31 10:02 GMT   |   Update On 2019-08-31 10:02 GMT
போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது என்று அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
கோவை:

கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள ஒரு ஓட்டலில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. கருத்தரங்கை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடங்கி வைத்து பேசியதாவது:-

வளர்ந்து வரும் விஞ்ஞான உலகில் நாட்டில் பொருளாதாரத்தை உயர்த்துவதில் போக்குவரத்து துறை முக்கிய பங்காற்றுகிறது.

போக்குவரத்து துறையில் ஏற்பட்ட இடர்பாடுகளை கலைய, மத்திய அரசுடன் பேசி முதல்-அமைச்சர் வெற்றி பெற்றுள்ளார். போக்குவரத்து துறை அதிகாரிகள் எடுத்த முயற்சியினால் ஒரு ஆண்டில் தமிழ்நாட்டில் சாலை விபத்துகள் 24 சதவீதம் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 6 மாதங்களில் 15 சதவீதம் விபத்துகளும், உயிரிழப்புகளும் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் நிதின்கட்காரி பாராளுமன்றத்தில் கூறினார்.

94 சட்ட திருத்தங்களில் 5 சட்ட திருத்தங்களில் மாநில உரிமை பாதிக்கப்படுகிறது. இவற்றில் திருத்தம் கேட்டுள்ளோம்.

தமிழ்நாட்டிற்கு என தனியாக சட்டம் கொண்டு வர முடியாது என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி அழுத்தம் திருத்தமாக கூறினார். சாலை விதிகளை அறவே மக்கள் கடைபிடிப்பதில்லை. இலங்கை, மொரிசீயஸ் உள்ளிட்ட நாடுகளில் மக்கள் சாலை விதிகளை கடைபிடிக்கின்றனர்.

சாலை விதி மீறல் அதிகமாக உள்ளது. விதி மீறல்களுக்கு அபராத தொகை அதிகமாக உள்ளது. விதிகளை கடைபிடித்தால் தான் விபத்துகள் குறையும். சாலை விபத்துக்களை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடைபெறுகின்றன. சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் மிக அதிகமாக உள்ளது.

கிராம பகுதியில் தலைகவசம் அணிவது குறைவாக உள்ளது. விபத்துகளில் 68 சதவீதம் பேர் தலை காயங்களால் உயிரிழக்கின்றனர். மேலை நாடுகளில் சைக்கிள் ஓட்டுபவர்கள் கூட தலைகவசம் அணிகின்றனர்.

ஒரு நாளைக்கு 47 ஆக இருந்த சாலை விபத்து உயிரிழப்புகள் 33 ஆக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் சாலைகள் தரமாக இருப்பதால் வாகனங்களின் வேகம் அதிகமாக உள்ளது. இதனால் உயிரிழப்புகள் அதிகம் நடக்கின்றன. சாலை விதிகளை முறையாக கடைபிடித்து, சாலை விபத்துகளை குறைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அமைச்சர் எஸ்.பி. வேலுமணி பேசியதாவது:-

மத்திய அரசு பல்வேறு சட்டங்கள் கொண்டு வந்தாலும், சில மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். ஜி.எஸ்.டி. கொண்டு வரும் போது தமிழக அரசு சொன்ன மாற்றங்களை மத்திய அரசு செய்தது. இதனால் மற்ற மாநிலங்களும் பயன்பெறுகின்றன. மக்கள் சாலை விதிகளை பின்பற்றி, விபத்துக்களை குறைக்க வேண்டும். சாலை விதிமீறல்களுக்கு அபராதம் அதிகமாக உள்ளதாக கூறுகின்றனர். சாலை விதிகளை பின்பற்றினால் அபராதம் கட்ட தேவையில்லை. எளிமையான முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு நாடுகளுக்கு சென்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களை செய்துள்ளார். சாலை பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் போக்குவரத்துறை கமி‌ஷனர் சமயமூர்த்தி, மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநரக போலீஸ் கமி‌ஷனர் சுமித்சரண், எம்.எல்.ஏ.க்கள் ஆறுக்குட்டி, கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

விபத்துகளையும், உயிரிழப்புகளையும் குறைக்க வேண்டும். விபத்தில்லா தமிழகம் உருவாக வேண்டும். பள்ளிகளில் சாலை பாதுகாப்பு குழு ஆரம்பித்துள்ளோம். இது மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படும். சாலை விதி மீறல்களுக்கு அதிக அபராத தொகை விதிப்பது விபத்துகளை குறைக்கும். 525 மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News