உத்தமபாளையம் அருகே போலி உரம் தயாரித்த கும்பல் மீது வழக்கு
தேனி:
தேனி மாவட்டம் கோம்பை அருகே உள்ள கீழ ரத வீதியைச் சேர்ந்தவர் ஷாம் இஸ்ரவேல் புஷ்பராஜ் (வயது 42). இவரும் குமுளி அருகே உள்ள சக்குபள்ளம் பகுதியைச் சேர்ந்த அனீஸ் ஆண்டனி (35) என்பவரும் அரசால் வழி வகை செய்யப்படாத போலி உரம் தயாரித்து விவசாயிகளிடம் விற்பனை செய்து வந்தனர்.
இந்த உரத்தின் தன்மை மீது சந்தேகம் ஏற்பட்டதால் விவசாயிகள் இது குறித்து உத்தமபாளையம் வேளாண்மை உதவி இயக்குனர் தெய்வேந்திரனிடம் புகார் அளித்தனர்.
அதன் பேரில் தெய்வேந்திரன் தலைமையில் வேளாண்துறை அலுவலர்கள் அவர்களது கடையில் சோதனை நடத்தினர். அப்போது அந்த கடையில் போலி உரம் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து அந்த உரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது குறித்து கோம்பை போலீஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.