செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

ஓட்டேரியில் மின்சாரம் தாக்கி பெண் பலி

Published On 2019-08-31 08:28 GMT   |   Update On 2019-08-31 08:28 GMT
ஓட்டேரியில் சாலையில் நடந்து சென்ற பெண் மின்சாரம் தாக்கியதில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அம்பத்தூர்:

துறைமுகம் மன்னடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (37). எழும்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சாந்தி (35). கடந்த 26-ந் தேதி ஓட்டேரியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு வந்த சாந்திக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து சுப்புராயன் 4-வது தெருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சாந்தி சென்றார். அப்போது திடீரென பூமியில் இருந்து வந்த உயர் அழுத்த மின்சாரம் சாந்தியின் மீது பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

இதில் அவரது கை, கால், முகம் ஆகியவை கருகியது. அப்போது அந்த வழியாக வந்த செகரெட்ரியேட் காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சாந்தியை தனது ஜீப்பில் ஏற்றி கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அப்போது வழியில் வந்த 108 ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு கடந்த 3 நாட்களாக தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை உண்டாக்கியது. அப்பகுதியில் கடந்தவாரம் மழைநீர் கால்வாய்க்கு பள்ளம் தோண்டினர். அப்போது பூமிக்கு கீழே செல்லும் உயரழுத்த மின் கேபிளில் உராய்வு ஏற்பட்டு மின் கசிவு இருந்துள்ளது.

இந்நிலையில் அந்த பகுதியில் நடந்து சென்ற சாந்தி மீது மின்சாரம் பாய்ந்து அவர் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மின்வாரிய ஊழியர்கள் மற்றும் சென்னை குடிநீர் வாரிய ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News