செய்திகள்
கலெக்டர் ஆசியா மரியம் ஆய்வு செய்த போது எடுத்தபடம்.

மல்லசமுத்திரம் சின்னஏரி ரூ.43 லட்சத்தில் புனரமைப்பு - கலெக்டர் நேரில் ஆய்வு

Published On 2019-08-29 17:06 GMT   |   Update On 2019-08-29 17:06 GMT
குடிமராமத்து திட்டத்தின் கீழ் மல்லசமுத்திரம் சின்னஏரி ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகிறது. இப்பணியை கலெக்டர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டார்.
நாமக்கல்:

தமிழக முதல்-அமைச்சரால் 2019-2020-ம் ஆண்டு குடிமராமத்து திட்டத்தின் கீழ் நாமக்கல் மாவட்டத்தில் சரபங்கா வடிநில கோட்ட பகுதிகளில் ரூ.5 கோடியே 17 லட்சம் மதிப்பீட்டில் 14 பணிகள் மேற்கொள்ளவும், மேட்டூர் அணைக்கோட்ட பகுதிகளில் ரூ.1 கோடியே 21 லட்சத்து 40 ஆயிரம் மதிப்பீட்டில் 5 பணிகள் மேற்கொள்ளவும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் சரபங்கா வடிநில கோட்டத்தில் ரூ.83 லட்சம் மதிப்பீட்டில் மோகனூர் வட்டத்தில் உள்ள பள்ள வாய்க்காலில் புனரமைக்கும் பணி, ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் வடகரையாத்தூர் கிராமத்தில் ராஜவாய்க்காலுக்கும், காவிரி ஆற்றுக்கும் இடையே 200 மீட்டர் நீளத்திற்கு கரையை புனரமைக்கும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் மல்லசமுத்திரம் சின்ன ஏரி ஆயக்கட்டு நீர்பாசன சங்கம் மூலமாக ரூ.43 லட்சம் மதிப்பீட்டில் மல்லசமுத்திரம் சின்ன ஏரி புனரமைக்கும் பணியினை விவசாய சங்கத்தினருடன் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரத்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா ராணி, உதவி பொறியாளர்கள், பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News