மெரினாவில் இளம்பெண்ணை மது போதையில் கட்டிப்பிடித்த வாலிபர்கள் 2 பேர் கைது
சென்னை:
எழும்பூரை சேர்ந்த 24 வயது இளம்பெண், நேற்று மாலை தனது தோழியுடன் மெரினா கடற்கரைக்கு சென்றார்.
பொதுப்பணி துறை அலுவலகம் எதிரே கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து 2 பேரும் பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது வட மாநில வாலிபர்கள் 3 பேர் வந்து ‘இந்தி தெரியுமா?’ என கேட்டு பேச்சு கொடுத்தனர்.
திடீரென 3 பேரில் ஒருவன் இளம்பெண்ணின் பின்பக்கமாக சென்று கட்டிப் பிடித்தான். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் வாலிபரை தள்ளி விட்டு விட்டு சாலையை நோக்கி ஓடிவந்தார்.
அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை காவலர்களான பாண்டியராஜன், தமிழரசன், பெருமாள்ராஜா ஆகிய 3 பேரிடமும் நடந்த சம்பவம் பற்றி முறையிட்டார். உடனே போலீசார் 3 வாலிபர்களில் 2 பேரை விரட்டி பிடித்தனர்.
ஒருவன் பெயர் சித்து, இன்னொருவன் ரஞ்சன். இருவரும் ஒரிசாவை சேர்ந்தவர்கள். அவர்கள் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.