திண்டுக்கல் அருகே தீ விபத்தில் மளிகை கடை எரிந்து நாசம்
வடமதுரை:
திண்டுக்கல் அருகே உள்ள வேல்வார்கோட்டை கிராமம் முத்தனாங்கோட்டையை சேர்ந்தவர் தெய் வேந்திரன்(45). அ.தி.மு.க பிரமுகர். இவர் அதேபகுதியில் டீக்கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார்.
இன்று அதிகாலை அவரது கடை தீப்பிடித்து எரிவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெய்வேந்திரனுக்கு போன் செய்தனர்.
இதனையடுத்து தெய்வேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்க முயன்றார். மேலும் திண்டுக்கல் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருந்தபோதும் கடையில் இருந்த ரூ.1500 ரொக்கப்பணம், மற்றும் ரூ.25ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.
இதுகுறித்து வடமதுரை போலீசில் தெய்வேந்திரன் புகார் அளித்தார். மின்கசிவினால் தீ விபத்து நடந்ததா அல்லது யாரேனும் முன்விரோதம் காரணமாக தீ வைத்துச்சென்றார்களா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.