செய்திகள்
தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக எழுந்த கரும்புகை

மேலூரில் தியேட்டரில் தீ விபத்து - ரசிகர்கள் ஓட்டம்

Published On 2019-08-26 03:17 GMT   |   Update On 2019-08-26 03:18 GMT
மதுரை மேலூரில் சினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் ஓட்டம் பிடித்தனர்.
மேலூர்:

மதுரை மாவட்டம் மேலூர் செக்கடி பகுதியில் 3 தியேட்டர்களுடன் கூடிய வளாகம் உள்ளது. தரைத்தளத்தில் 2 தியேட்டர்களும், 2-வது தளத்தில் குளிர்சாதன வசதியுடன் கூடிய தியேட்டரும் உள்ளன. முதல் தளத்தில் கடைகள் உள்ளன. நேற்று பகல் காட்சி 3 தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டு இருந்தது.

சினிமா இடைவேளையின்போது, அந்த தியேட்டரில் கடைகள் செயல்படும் முதல் தளத்தில் இருந்து திடீரென கரும்புகை வந்தது. குளிர்சாதன கருவிகளுக்கான மின்சப்ளை செய்யும் அறையில் தீப்பிடித்து, அந்த அறையில் கிடந்த பழைய இருக்கைகள் மற்றும் சில பொருட்கள் எரிந்து கொண்டிருந்தது தெரியவந்தது.

உடனே ஊழியர்கள் 3 தியேட்டர்களிலும் காட்சிகளை நிறுத்திவிட்டு, அனைத்து அவசர வழிகளையும் திறந்துவிட்டனர். இதையடுத்து ரசிகர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.

இதையடுத்து அங்கிருந்த தீயணைக்கும் கருவிகளை வைத்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் தீயை அணைக்க முடியவில்லை. தீ விபத்து குறித்து தகவல் அறிந்ததும் மேலூர் தீயணைப்பு படையினர், விரைந்து வந்து தியேட்டரில் எரிந்த தீயை அணைத்தனர்.

இதுதொடர்பாக மேலூர் போலீசார் விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், தியேட்டரின் முதல் தளத்தில் இருந்த மின்சாதன பொருட்களில் மின்கசிவு ஏற்பட்டதால் இந்த தீவிபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்தை தொடர்ந்து சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டது. அந்தந்த காட்சிக்குரிய பணத்தை ரசிகர்களிடம் தியேட்டர் நிர்வாகம் திரும்ப வழங்கியது.

Tags:    

Similar News