செய்திகள்
எருது விடும் விழாவில் வெற்றிகளை குவித்த எருது பலி
பொங்கல் விழாவின் போது நடைபெறும் எருது விடும் திருவிழாவில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்று வந்த எருது திடீரென நேற்று இறந்து போனது. அதற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் அஞ்சூர் அருகே உள்ள சின்னபன முட்லு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி அண்ணாமலை. இவர் ஒரு எருதை "சொப்பன சுந்தரி'' என பெயரிட்டு, வளர்த்து வந்தார். இந்த எருது, பர்கூர் உள்ளிட்ட சுற்று வட்டாரத்தில் பொங்கல் விழாவின் போது நடைபெறும் எருது விடும் திருவிழாவில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை பெற்று வந்தது. இதனால் கிராமத்திற்கு நல்ல பெயரும், புகழும் சேர்ந்தது.
இதே போல் அண்டைய மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை போன்ற இடங்களிலும், ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் நடந்த எருது விடும் விழாவிலும் பங்கேற்று முதல் பரிசுகளை தட்டி வந்துள்ளது. 10 வயதுடைய இந்த எருது நேற்று காலை திடீரென்று இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் இறந்து போன எருதிற்கு கிராம மக்கள் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அந்த எருதிற்கு ஊர் மக்கள் ஒன்று கூடி இறுதி சடங்குகள் செய்து அடக்கம் செய்தனர். தங்கள் ஊருக்கு பெயர் சேர்ந்த எருது இறந்ததால் சின்னபனமுட்லு கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.