கடன் வாங்காத நிலையில் ரூ.3.90 லட்சம் கடன் பெற்றதாக விவசாயிக்கு வங்கி நோட்டீஸ்
திருவாரூர்:
திருவாரூரைச் சேர்ந்தவர் பாண்டியன்(வயது45), விவசாயி. இவரது வீட்டு முகவரிக்கு விளமல் பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. இந்த நோட்டீசை வாங்கி படித்து பார்த்த பாண்டியன் கடும் அதிர்ச்சி அடைந்தார்.
அதில் தாங்கள் வங்கியில் வாங்கிய 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் கடனை கட்டாததால் 2 சதவீதம் வட்டி உங்களது வங்கி கணக்கில் இருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
கடனை வாங்காத நிலையில் வங்கி நிர்வாகம் எப்படி தனக்கு நோட்டீஸ் அனுப்பியது என்று பாண்டியன் குழப்பம் அடைந்தார். மேலும் கடன் கட்டவில்லை எனக்கூறி தனது மற்றொரு கிளையின் வங்கி கணக்கில் இருந்து வட்டியாக ரூ.4 ஆயிரத்து 600 வசூல் செய்யப்பட்டுள்ளதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து விவசாயி பாண்டியன், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ரிசர்வ் வங்கி மற்றும் சம்பந்தப்பட்ட வங்கி மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
அதில் பாண்டியன் விளமல் வங்கி கிளையில் தனக்கு வங்கி கணக்கே இல்லை. இந்த நிலையில் கடன் எதுவும் வாங்காத தனக்கு கடன் வாங்கியதாக வங்கி நிர்வாகம் எப்படி நோட்டீஸ் அனுப்பியது’? என்று விளக்கம் அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.