மணலியில் சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: மின்வாரிய ஊழியர் கைது
திருவொற்றியூர்:
மணலி போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் எழில் மற்றும் காவலர் ஜெகன் ஆகியோர் மணலி சி.பி.சி.எல். தொழிற்சாலை முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது எண்ணூரைச் சேர்ந்த மின் ஊழியர் மணிமாறன் மோட்டார் சைக்கிளில் வந்தார். அவரை மடக்கி சோதனையிட்டபோது அவர் மது அருந்தி இருப்பது தெரிந்தது.
இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குபதிவு செய்ய நடவடிக்கை எடுத்தனர். அப்போது மணிமாறன் தனது நண்பரான மின் வாரிய ஊழியர் பன்னீர் செல்வத்துக்கு போன் மூலம் தகவல் கொடுத்து வரவழைத்தார்.
பின்னர் இருவரும் போலீசாரிடம் வழக்கு போடக் கூடாது என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் சப்-இன்ஸ்பெக்டர் எழிலுக்கும், பன்னீர் செல்வத்துக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதுபற்றி சப்- இன்ஸ்பெக்டர் எழில் மணலி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் பன்னீர்செல்வத்தை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.