செய்திகள்
கோவையில் கமாண்டோ படை வீரர்கள்

பயங்கரவாதிகள் ஊடுருவல் - கோவையில் கமாண்டோ படையினர் சோதனை

Published On 2019-08-25 06:52 GMT   |   Update On 2019-08-25 06:52 GMT
பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கோவை முழுவதும் இன்று சோதனை நடத்தப்பட்டது.

கோவை:

இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது கிறிஸ்தவ தேவாலயங்களில் நடை பெற்ற தொடர் குண்டு வெடிப்பு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

இலங்கையில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் தமிழகத்திலும் தாக்குதலுக்கு திட்டமிட்டிருப்பதாக திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. இதையடுத்து தமிழகத்திலும் போலீசார் உஷார் படுத்தப்பட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக கடந்த 21-ந்தேதி மத்திய உளவுப்பிரிவினர் எச்சரிக்கை தகவல் ஒன்றை அனுப்பினர்.

இந்த பயங்கரவாதிகள் கோவையில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் இதற்காக 6 பயங்கரவாதிகளும் ரகசிய இடத்தில் பதுங்கி இருப்பதாகவும் கூடுதல் தகவல் வெளியானது.

பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவத்தை முறியடிக்க கோவை மாவட்டம் முழுவதும் போலீசார் முடுக்கிவிடப்பட்டனர்.


கமாண்டோ படையினரும் கோவை முழுவதும் குவிக்கப்பட்டு துப்பாக்கி ஏந்தியபடி ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீசார் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தியுள்ளனர். சந்தேகத்துக் கிடமாக யாராவது சுற்றித்திரிந்தால் அதுபற்றி பொது மக்கள் போலீசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

கோவையில் ஊடுருவியதாக கூறப்படும் 6 பயங்கரவாதிகளும் லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள். அதில் ஒருவர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கையை சேர்ந்தவர்கள் என்கிற தகவலும் வெளியானது.

கேரளாவை சேர்ந்த அப்துல்காதர் என்பவர்தான் பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவுவதற்கு முக்கிய காரணமாக இருந்ததாகவும் கூறப்பட்டது. இதையடுத்து போலீசார் நடத்திய வேட்டையில் கேரளாவில் அப்துல் காதர் என்பவர் ஒரு பெண்ணுடன் பிடிபட்டார்.

கோவையிலும் திருச்சூரை சேர்ந்த சித்திக், கோவை உக்கடத்தை சேர்ந்த ஜாகீர் ஆகியோரும் பிடிபட்டனர். இவர்கள் இருவரும் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். கேரளாவை சேர்ந்த அப்துல்காதரிடமும், அவருடன் சிக்கிய பெண்ணிடமும் விசாரணை நடை பெற்று வருகிறது.

விநாயகர் சதுர்த்தி விழாவை சீர்குலைப்பதற்காகவே பயங்கரவாதிகள் திட்டமிட்டு இருந்ததாக முதலில் தகவல் வெளியானது. இந்த நிலையில் இலங்கையில் நடைபெற்றதுபோன்று தமிழகத்திலும் குறிப்பாக கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் பயங்கரவாதிகள் பலத்த தாக்குதல் நடத்தலாம் என்றும் போலீசார் சந்தேகித்தனர்.

இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கிறிஸ்தவ ஆலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். கிறிஸ்தவர்களின் கூட்டமும் அதிகமாக காணப்படும். இதனை பயன்படுத்தி பயங்கரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு விடக்கூடாது என்பதற்காக கோவை முழுவதும் இன்று கிறிஸ்தவ ஆலயங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.

நேற்று இரவு கோவை மாநகரில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் போலீசார், வெடி குண்டு நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சோதனை நடத்தினார்கள். பிரார்த்தனைக்கு வந்தவர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

கோவை டவுன் ஹால் மைக்கேல் ஆலயம், உப்பிலி பாளையம் இமானுவேல் ஆலயம், திருச்சி ரோடு சி.எஸ்.ஐ. கிறிஸ்துநாதர் ஆலயம், ஆர்.எஸ்.புரம் சிரியன் சர்ச், காந்திபுரம் பாத்திமா ஆலயம், போத்தனூர் ஜோசப் ஆலயம், மதுக்கரை மார்க்கெட் ஹோல் டிரினிட்டி ஆலயம், உள்ளிட்ட நகரின் பல்வேறு கிறிஸ்தவ ஆலயங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு சோதனை நடைபெற்றது.

கோவை காந்திபுரம், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர், போத்தனூர் ஆகிய பகுதிகளிலும் பாதுகாப்பு கருதி தீயணைப்பு வாகனங்களும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளன. கிறிஸ்தவ தேவாலயங்கள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். கோவை மாநகர எல்லை பகுதியில் உள்ள 10 சோதனை சாவடிகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கோவை நகருக்குள் வரும் வாகனங்கள் மற்றும் கோவையில் இருந்து வெளியே செல்லும் வாகனங்களை தீவிரமாக சோதனை செய்த பின்னரே போலீசார் அனுமதிக்கின்றனர். 40-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட் டுள்ளது.

கோவையில் கடந்த 1998-ல் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தின்போது இதுபோன்று போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 21 ஆண்டுகளுக்கு பிறகு கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தை நினைவுப்படுத்தும் வகையில் இப்போது பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் பல்வேறு இடங்களில் இன்று 4-வது நாளாக சோதனை நடைபெற்று வரு கிறது. கமாண்டோ, போலீஸ் படையினரின் கொடி அணி வகுப்பும் நடைபெற்றது.

தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. ஜெயந்த் முரளி நேரடி மேற்பார்வையில் கோவை மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுமித் சரண், துணை கமி‌ஷனர் பாலாஜி சரவணன் தலைமையில் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

கோவை விமான நிலையத்திலும் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News