செய்திகள்
தஞ்சை பெரிய கோவில்

பயங்கரவாதிகள் ஊடுருவல் - தஞ்சை பெரிய கோவிலில் 3 அடுக்கு பாதுகாப்பு

Published On 2019-08-24 08:26 GMT   |   Update On 2019-08-24 08:26 GMT
தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதையடுத்து உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தஞ்சாவூர்:

பாகிஸ்தானில் இருந்து தமிழகத்துக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி உள்ளதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். முக்கிய இடங்களில் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டனர்.

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆணைப்படி, போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன் உத்தரவின் பேரில் 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தஞ்சையில் பெரியகோவில், சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவில், தஞ்சாவூர் அரண்மனை, தேவாலயங்கள், மசூதி, பூங்காக்கள், தியேட்டர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் இன்று 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பெரிய கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை நுழைவு வாசலுக்கு முன்பே போலீசார் சோதனை செய்தனர். அவர்கள் கொண்டுவரும் உடமைகள் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்யப்பட்டது. மேலும் பெரிய கோவில் வளாகத்திலும் போலீசார் குவிக்கப்பட்டனர். சந்தேகப்படும்படியாக யாராவது வந்தால் அவர்கள் தீவிர விசாரணைக்கு பிறகு அனுப்பி வைக்கப்படுகின்றனர். நகரில் பல இடங்களில் போலீசார் மப்டியில் இருந்து கண்காணிக்கின்றனர்.

பஸ் நிலையம், ரெயில் நிலையங்களிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனை நடத்தி வருகின்றனர். லாட்ஜ், ஹோட்டலில் அறை எடுத்து தங்கி இருப்பவர்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகிறது. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Tags:    

Similar News