செய்திகள்
மதுபோதையில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த வாலிபர்
போச்சம்பள்ளி அருகே மதுபோதையில் விவசாய கிணற்றில் தவறி விழுந்த வாலிபரை தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் கட்டி மீட்டனர்.
போச்சம்பள்ளி:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த எர்ரம்பட்டி கிராமத்தில் அப்புனு என்பவரது விவசாயி நிலத்தில் சுமார் 50 அடி ஆழம் கொண்ட விவசாய கிணறு உள்ளது. இந்த ஆண்டு போதிய மழையின்மை காரணமாக கிணற்றில் நீர் வறண்டு காணப்பட்டது.
இந்நிலையில் நேற்று மாலை 5 மணியளவில் கிணற்றில் இருந்து யாரோ அலறுவதுபோல் சத்தம் கேட்டது. அந்த வழியாக சென்றவர் எட்டிப்பார்த்த போது கிணற்றில் ஒருவர் உயிருக்கு போராடி கொண்டிருப்பது தெரியவந்தது. பின்னர் கிராம மக்கள் போச்சம் பள்ளி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் கிணற்றில் விழுந்த வாலிபரை கயிறு மூலம் கட்டி மீட்டனர்.
முதற்கட்ட விசாரணையில் போச்சம்பள்ளி அடுத்த கொடமாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த லாரி ஓட்டுனரான அரங்கநாதன் (வயது32) என்பதும், இவர் நேற்று இரவு எர்ரம்பட்டி டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு இரவில் இவ்வழியே சென்ற போது கிணற்றில் தவறி விழுந்ததாகவும், விழுந்த வேகத்தில் மயக்கமடைந்ததாகவும், நேற்று மாலை 5 மணியள வில் மயக்கம் தெளிந்த பின்பு கூச்சலிட்டது தெரியவந்தது.