செய்திகள்
கொள்ளை

தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோவிலில் உண்டியல் பணம் கொள்ளை

Published On 2019-08-23 13:14 GMT   |   Update On 2019-08-23 13:14 GMT
கோதண்டராமர் கோவில் கதவை உடைத்து உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த துணிகர செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராமேசுவரம்:

ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலின் உப கோவிலான கோதண்ட ராமர் கோவில் தனுஷ்கோடி சாலையில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

நேற்று இரவு வழக்கம் போல் ஊழியர்கள் கோவிலை பூட்டிவிட்டு சென்று விட்டனர். நள்ளிரவு நேரத்தில் அங்கு வந்த மர்ம நபர்கள் கதவை உடைத்து கோவிலுக்குள் புகுந்தனர்.

பின்னர் வளாகத்தில் இருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பணத்தை கொள்ளையடித்தனர். தொடர்ந்து அந்த கும்பல் கோவிலுக்குள் இருந்த பொருட்களையும் அடித்து நொறுக்கி சேதப்படுத்தி சென்றது.

இன்று காலை கோவிலை திறக்க வந்த ஊழியர்கள் கதவு உடைக்கப்பட்டு உண்டியல் பணம் கொள்ளைபோய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தனுஷ்கோடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடம் வந்து விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த தடயங்களும் சேகரிக்கப்பட்டன.

கொள்ளைபோன உண்டியல் பணத்தின் மதிப்பு எவ்வளவு என்று தெரியவில்லை. சில நாட்களுக்கு முன்புதான் கோவில் உண்டியல் திறக்கப்பட்டு பணம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News