பயங்கரவாதிகள் ஊடுருவல் - தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் உஷார் நிலையில் போலீசார்
திண்டுக்கல்:
தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வந்த தகவலின் பேரில் அனைத்து மாவட்ட போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் நக்சலைட்டு மற்றும் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் அடிக்கடி இடம் பெயர்ந்து வருவது வழக்கம்.
இதே போல கொடைக்கானல் மலைப்பகுதியிலும் பயங்கரவாத செயல்களில் தொடர்புடையவர்கள் நடமாட்டம் இருப்பதால் போலீசார் அடிக்கடி ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது கிடைத்த தகவலையடுத்து தமிழக எல்லை பகுதியான போடி மெட்டு, கம்பம் மெட்டு, குமுளி ஆகிய பகுதிகளில் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகப்படும்படியாக வரும் வாகனங்களை நிறுத்தி சோதனையிட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் வைத்துள்ள பொருட்களையும் சோதனை செய்கின்றனர். திண்டுக்கல், பழனி ரெயில் நிலையங்களில் ரெயில்வே போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் முக்கிய வழிபாட்டுத் தலங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் போலீசார் ரகசியமாக கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இது தவிர தங்கும் விடுதிகளில் யாரேனும் வெளியூர் நபர்கள் சந்தேகப்படும்படி உள்ளனரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.