செய்திகள்
முக ஸ்டாலின்

திமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி - ஸ்டாலின்

Published On 2019-08-22 14:09 GMT   |   Update On 2019-08-22 14:09 GMT
காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க கோரி தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
சென்னை:

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அதிகாரத்தை மத்திய அரசு ரத்து செய்ததுடன், அந்த மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக  பிரித்தது. இதற்கான மசோதாவை இந்த மாத துவக்கத்தில் பாராளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றியது. 

அத்துடன் ஜம்மு காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவியதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராணுவம் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அரசியல் தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அதிரடி நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 
 
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து திமுக சார்பாக போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று திமுக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில், திமுக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தேசிய மாநாட்டு கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்பிக்கள் பலர் பங்கேற்றனர். காங்கிரஸ் கட்சியின் கார்த்தி சிதம்பரம் எம்.பி.யும் போராட்டத்தில் பங்கேற்றார்.

இந்நிலையில், காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை விடுவிக்க கோரி திமுக நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அரசியல் தலைவர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் பாதுகாக்க காஷ்மீரில் கைது செய்யப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை உடனே விடுவிக்க வலியுறுத்தி தி.மு.க. ஏற்பாட்டில் டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்து அரசியல் தலைவர்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News