அலங்காநல்லூர் அருகே போக்குவரத்து ஊழியர் கொலையில் 2 வாலிபர்கள் கைது
அலங்காநல்லூர்:
மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள 15பி.மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பெரியணன்(வயது 32). இவர் மதுரை பசுமலையில் உள்ள போக்குவரத்து பணிமனையில் மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி தானியலட்சுமி (24) என்ற மனைவி உள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் 15பி. மேட்டுப்பட்டி நாடகமேடை பகுதியில் உள்ள வயல்வெளியில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் பெரியணன் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
தகவலறிந்த அலங்கா நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவ தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று பெரியணன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலம்பரசன்(38), சிவா(24) ஆகியோர் மது குடித்ததாக தெரிகிறது. நாடகமேடை பகுதியில் வந்த போது அவர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த சிலம்பரசன், சிவா ஆகியோர் பெரியணன் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.
மேற்கண்ட தகவல் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் 2 பேரையும் கைது செய்தனர்.