செய்திகள்
சென்னை ஐகோர்ட்

கிரண் பேடிக்கு எதிரான உத்தரவு தொடரும் -சென்னை ஐகோர்ட்

Published On 2019-08-21 07:36 GMT   |   Update On 2019-08-21 07:36 GMT
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் அதிகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் தொடர்ந்த வழக்கில் நீதிபதி அளித்த உத்தரவுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
புதுச்சேரி:

மத்திய உள்துறை அமைச்சகம் அளித்த அதிகாரத்தை பயன்படுத்தி புதுச்சேரியில் முதலமைச்சர் நாராயணசாமியின் அதிகாரத்தில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி அதிகமாக தலையீடு செய்வதாக சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளையில் புதுவையை சேர்ந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அரசின் அன்றாட நடவடிக்கைகளை பரிசீலிக்கும் வகையில் துணைநிலை ஆளுநர்களுக்கு கடந்த 2017-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் அளித்திருந்த சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும் எனவும் லட்சுமி நாராயணன் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வழக்கில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி மகாதேவன், ’முதலமைச்சரின் அதிகாரத்திலும் அன்றாட அலுவல்களில் தலையிடவும், கோப்புகளை பார்வையிட்டு அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவிடவும் துணைநிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை.



மேலும், யூனியன் பிரதேச அரசின் நடவடிக்கைகளில் தலையிடும் வகையில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் உண்டு என்ற மத்திய அரசின் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’ என உத்தரவிட்டார்.

தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம்  சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கை இன்று விசாரித்த  சென்னை ஐகோர்ட், ‘புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கிரண்பேடி தலையிட கூடாது என்ற உத்தரவு தொடரும்’என தெரிவித்தது.

மேலும் வரும் செப்டம்பர் 4ம் தேதிக்குள் பதிலளிக்க கிரண் பேடிக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News