செய்திகள்
திருட்டு

தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளை - மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2019-08-21 03:28 GMT   |   Update On 2019-08-21 03:28 GMT
திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே தனியார் வங்கியில் ரூ.16 லட்சம் கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருச்சி:

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் சிட்டி யூனியன் வங்கி கிளை உள்ளது. இந்த தனியார் வங்கி கிளையில் ‘லோகி கேஸ் ஏஜென்சி’ நிறுவனத்தினர் பணம் பெற்று துறையூர், உப்பிலியபுரம் பகுதியில் உள்ள ஏ.டி.எம்.களில் பணம் நிரப்புவது உண்டு. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களான முசிறியை சேர்ந்த சரவணன் (வயது 38), திருச்சி அரியமங்கலம் அம்பிகாபுரத்தை சேர்ந்த அருண் (33) ஆகியோர் நேற்று காலை சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள சிட்டி யூனியன் வங்கிக்கு பணம் வாங்க வந்தனர்.

வங்கியில் பணம் செலுத்தும் கவுண்ட்டரில் ரூ.16 லட்சத்தை பெற்று அதனை ஒரு பையில் வைத்தனர். மற்றொரு பையில் ரூ.18 லட்சத்தை வாங்கி நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது ரூ.16 லட்சம் வைத்திருந்த பையை திடீரென காணவில்லை. இதனால் சரவணன், அருண் ஆகியோர் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்தவர்களிடம் பணம் வைத்திருந்த பை குறித்து கேட்டனர். ஆனால் அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் 2 பேரும் உடனடியாக வெளியே வந்து பார்த்தனர். ஆனால் பையை கொள்ளையடித்துச் சென்றது யார்? என தெரியவில்லை.

இதைத்தொடர்ந்து கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை கொள்ளையடித்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News