செய்திகள்
தனியார் பள்ளி ஆசிரியை சாவில் மர்மம் நீடிப்பு- போலீசார் விசாரணை
ஊத்தங்கரை அருகே விவசாய கிணற்றில் பிணமாக கிடந்த தனியார் பள்ளி ஆசிரியை சாவில் மர்மம் நீடிப்பதால் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அரூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த பாரதிபுரம் இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ஜெயகாந்த் (வயது 42) பெயிண்டர். இவருக்கும், அப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த விஜயலட்சுமி (37) என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு விஜயபிரியன் (11), ஹன்சிகா (9) என்ற மகன், மகள் உள்ளனர்.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், 7 ஆண்டுகளாக தனது தந்தையின் வீட்டில், மகளுடன் விஜயலட்சுமி வசித்து வந்தார். மேலும், ஊத்தங்கரை பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 16-ந் தேதி மாலை 5.30 மணிக்கு தர்மபுரி மாவட்டம், அரூரை அடுத்த கட்டரசம்பட்டியில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு செல்வதாக கூறிச்சென்ற விஜயலட்சுமி வீடு திரும்பவில்லை. இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு, பொய்யப்பட்டியில் உள்ள சென்னகிருஷ்ணன் என்பவரது விவசாய கிணற்றில், விஜயலட்சுமி பிணமாக கிடந்தார்.
இது குறித்து தகவலறிந்த கோட்டப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் இருந்த விஜயலட்சுமியின் உடலை மீட்டு, மேலே கொண்டு வந்தனர். அவரது கழுத்தில் நகை மற்றும் பர்சில் 20 ஆயிரம் ரூபாய் இருந்தது. விஜயலட்சுமி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டரா? என்பது குறித்து பிரேத பரிசோதனை முடிவுக்கு பிறகு தான் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். தனியார் பள்ளி ஆசிரியர் சாவில் மர்மம் நீடிப்பதால் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.