செய்திகள்
பாலகிருஷ்ணன்

ஆவின் பால் விலை உயர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம்

Published On 2019-08-18 15:00 GMT   |   Update On 2019-08-18 15:00 GMT
வியாபார நோக்கில் ஆவின் பாலை அரசு உயர்த்தி உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

திண்டுக்கல்:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் திண்டுக்கலில் நிருபர்களிடம் கூறியதாவது:-

பால் கொள்முதலுக்கு ரூ.4 விலையை உயர்த்தி விட்டு விற்பனையில் ரூ.6 உயர்த்தியிருப்பதற்கான அவசியம் என்ன? வியாபார நோக்கில் அரசு விலையை உயர்த்தி உள்ளது. தமிழக மக்களுக்கான எந்த ஒரு திட்டமும் அரசிடம் கிடையாது.

அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். வேலூர் தேர்தலில் ஆளும் கட்சியினருக்கு செல்வாக்கு உயர்ந்துள்ளதாக கூறும் முதலமைச்சர் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தினால் யாருக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது என்பது தெரியவரும். மத்திய அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது .

மத்திய அரசின் செயல்பாட்டினால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதனை மறைப்பதற்காக மக்களை பதட்டமாக வைப்பதற்காகவே மோசமான மசோதாக்களை நிறைவேற்றி வருகின்றனர். இதற்கு உடனடியாக ஜனாதிபதியும் அனுமதி அளித்து வருகிறார்.

முதலமைச்சரும் அமைச்சர்களும் மக்களுக்கு ஆக்கபூர்வமான பணிகள் எதுவும் செய்யவில்லை. அமைச்சர் மணிகண்டன் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையால்தான் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். தமிழகம் மோசமான நிலைமையில் சென்று கொண்டிருக்கிறது.

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் குடி மராமத்து பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியில் 10 சதவீதம் மட்டுமே வேலைகள் நடைபெற்று உள்ளது. 90 சதவீத பணிகள் நடைபெறாமல் மோசடி செய்யப்பட்டுள்ளது. ஆளும் கட்சியினர் குடிமராமத்து பணி என்ற பெயரில் மொத்தமாக பணத்தை எடுத்துச் செல்கின்றனர்.

நீலகிரியில் மழையால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அதை பார்க்க வேண்டும் என்ற அக்கறை தமிழக முதல்வருக்கு கிடையாது. தற்போது பெய்த மழையினால் கேரளாவில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. இதனைப் பார்க்க ஒரு மத்தியஅமைச்சர் கூட கேரளாவிற்கு செல்ல வில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News