செய்திகள்
மரணம்

கும்பகோணம் அருகே நள்ளிரவில் மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலி

Published On 2019-08-18 09:17 GMT   |   Update On 2019-08-18 09:17 GMT
கும்பகோணம் அருகே சுவாமிமலையில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சுவாமிமலை:

கும்பகோணம் அருகே சுவாமிமலையில் பிளக்ஸ் பேனர் வைத்த போது மின்சாரம் தாக்கி 2 வாலிபர்கள் பலியானார்கள். நண்பர்கள் 2 பேர் காயம் அடைந்தனர்.

நேற்று நள்ளிரவில் நடந்த இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கும்பகோணம் அருகே இனாம் கிளியூர் சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). லோடு ஆட்டோ டிரைவர்.

இந்த நிலையில் ஹரிஹரனின் நண்பர் இல்ல திருமண விழா சுவாமிமலையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இன்று காலை நடைபெறுவதாக இருந்தது.

இதனால் நேற்று நள்ளிரவில் ஹரிஹரன் தனது நண்பர்களான கும்பகோணத்தை சேர்ந்த முகமது (24), சாக்கோட்டையை சேர்ந்த சிவா (25), மற்றும் ஆழ்வான்கோவில் தெருவை சேர்ந்த விஜய்(25) ஆகியோருடன் சுவாமிமலை பகுதியில் பிளக்ஸ் பேனர் வைத்து கொண்டிருந்தார்.

நள்ளிரவு ஒரு மணியளவில் 4 பேரும் திருமண மண்டபத்திற்கு எதிரே பிளக்ஸ் பேனர் கட்டுவதற்கு முயற்சி செய்துள்ளனர்.அப்போது எதிர்பாராத விதமாக அருகில் இருந்த டிரான்ஸ்பார்மரில் பிளக்ஸ் போர்டின் கம்பி பட்டு மின்சாரம் பாய்ந்தது. இதில் ஹரிஹரன், முகமது ஆகிய இருவரும் உடல் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் சிவா, விஜய் ஆகியோர் காயம் அடைந்தனர்.

உடனே அக்கம்பக்கத்தினர் காயம் அடைந்த இருவரையும் மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சுவாமிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். திருமண பிளக்ஸ் பேனர் வைத்தபோது 2 வாலிபர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News