அருப்புக்கோட்டையில் தொழிலாளி வீட்டில் மொய்பணம் திருட்டு
பாலையம்பட்டி:
அருப்புக்கோட்டை தேவாடெக்ஸ் காலனியைச் சேர்ந்தவர் வில்லப்பன். ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி ஆதிலட்சுமி. வில்லப்பன் நேற்று ஆடு மேய்க்கச் சென்று விட்டார். கடைசி ஆடி வெள்ளிக் கிழமையையொட்டி ஆதிலட்சுமி கருங்குளத்தில் உள்ள அம்மன் கோவிலுக்கு சென்று விட்டார்.
இதை அறிந்த யாரோ மர்ம மனிதர்கள் வில்லப்பன் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.
வீட்டில் இருந்த பீரோவை உடைத்த அவர்கள் அங்கிருந்த 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மற்றும் 4 பவுன் நகையை திருடிக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்று விட்டனர்.
சில நாட்களுக்கு முன்பு வில்லப்பனின் மகளுக்கு காது குத்தும் வைபவம் நடந்தது. அப்போது மொய் பணம் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் வசூலாகி இருந்தது.
ஆழ்குழாய் கிணறு அமைக்க வேண்டும் என்பதற்காக வில்லப்பன் அந்த பணத்தை வீட்டிலேயே வைத்திருந்தார்.
இந்த துணிகர கொள்ளை குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் வில்லப்பன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை-பணத்தை திருடிச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.