செய்திகள்
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க மறுப்பு- மனுக்களை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்
காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரிய மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:
காஞ்சிபுரத்தில் அத்திவரதர் தரிசனம் இன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தென்னிந்திய இந்து மகா சபா மற்றும் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 2 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அந்த மனுக்களில், “1979ல் அத்திவரதர் தரிசனத்திற்கு வைக்கப்பட்டபோது, கூட்டம் அதிகமாக இருந்ததால் தரிசனம் 48 நாட்களாக நீட்டிக்கப்பட்டது. ஆனால், 48 நாட்கள் தான் தரிசனத்திற்கு வைக்க வேண்டும் என எந்த ஆகம விதியும் இல்லை. அதனால், இப்போது தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிடவேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை நடத்தியது.
அப்போது, அத்திவரதர் தரிசனம் நீட்டிக்கப்பட மாட்டாது என தமிழக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதிகள், தரிசனத்தை நீட்டிக்கும்படி உத்தரவிட முடியாது என கூறி மனுக்களை தள்ளுபடி செய்தனர். மேலும் மத வழிபாடு நடைமுறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.