செய்திகள்
தற்கொலை

கோவை கல்லூரி மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை

Published On 2019-08-15 10:09 GMT   |   Update On 2019-08-15 10:09 GMT
கோவையில் கல்லூரி படிப்பை தொடர விருப்பம் இல்லாத மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மங்கலத்தை அடுத்துள்ளது நீலிபிரிவு. இந்த பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 47). விசைத்தறி உரிமையாளர். இவரது மகன் சுரேஷ்ராஜன் (19). கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். சி.ஏ. முதலாமாண்டு படித்து வந்தார்.

படிக்க விருப்பம் இல்லாததால் சென்ற வருடம் படிப்பை பாதியிலேயே நிறுத்தினார். மகனை படிக்க வைக்க வேண்டும் என்று விரும்பிய தந்தை மீண்டும் சுரேஷ்ராஜனை இந்த ஆண்டு அதே கல்லூரியில் சேர்த்து விட்டார்.

சில நாட்களுக்கு பின்னர் சுரேஷ்ராஜன் முறையாக கல்லூரிக்கு வருவதில்லை என்று நிர்வாகம் சார்பில் மாணவரின் பெற்றோருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து தந்தை மகனுக்கு அறிவுரை வழங்கினார். ஆனாலும் தொடர்ந்து படிக் விருப்ப மில்லாத சுரேஷ்ராஜன் விரக்தியடைந்தார்.

சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு புறப்பட்டு சென்றார். அதன்பின்னர் வீடு திரும்பவில்லை. அதிர்ச்சியடைந்த பெற்றோர் அக்கம் பக்கம், உறவினர், நண்பர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் அவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் சுரேஷ்ராஜன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் சாமளாபுரம் குளம் அருகே நிற்பதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து சுரேஷ்ராஜனின் பெற்றோர் அங்கு சென்று மோட்டார் சைக்கிளை எடுத்து வந்தனர். இந்த நிலையில் சாமளாபுரம் குளத்தில் சுரேஷ்ராஜனின் உடல் மிதப்பதாக மங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று சுரேஷ்ராஜனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கல்லூரியில் படிப்பை தொடர விருப்பம் இல்லாத மாணவர் குளத்தில் குதித்து தற்கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News