செய்திகள்
போலீசார் விசாரணை

சூளகிரி அருகே பெண் வெட்டிக்கொலை: கைதான கணவரிடம் போலீசார் விசாரணை

Published On 2019-08-14 13:10 GMT   |   Update On 2019-08-14 13:10 GMT
சூளகிரி அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் பெண்ணை வெட்டிக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த புனல்நத்தம் பகுதியை சேர்ந்தவர் முனிவெங்கடப்பா. இவரது மனைவி சின்னம்மாதேவி (வயது 40). இவர் நேற்று காலை பீர்பள்ளி கிராமத்தில் உள்ள விவசாய விளைநிலத்தில் கை, கால், தலை உள்ளிட்ட பகுதிகளில் வெட்டுக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணமாக கிடந்த சின்னம்மாதேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து சின்னம்மாதேவி எதற்காக கொலை செய்யப்பட்டார்? யார் கொலை செய்தனர்? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் சின்னம்மாதேவியின் கணவர் முனிவெங்கடப்பா  மாயமாகி உள்ளது தெரியவந்தது. அவர் தனது மனைவியை கொன்றுவிட்டு தலைமறைவாகி இருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் முனிவெங்கடப்பாவை போலீசார் தேடிவந்தனர். நேற்று மதியம் முனிவெங்கடப்பா கிருஷ்ணகிரி டி.எஸ்.பி. அலுவலகத்தில் சரண் அடைந்தார்.

அவரிடம் சூளகிரி போலீசார் கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் கள்ளக்காதல் விவகாரத்தில் சின்னம்மாதேவியை அவரது கணவர் முனிவெங்கடப்பா வெட்டி கொன்றதை ஒப்பு கொண்டார். இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு இன்று 2-வது நாளாக போலீசார் விசாரணை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News