செய்திகள்
அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது - ஐகோர்ட்டு
அத்திவரதர் தரிசனத்தை மேலும் 48 நாட்களுக்கு நீட்டிக்க அரசுக்கு உத்தரவிட முடியாது என சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
சென்னை:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்தில் இருந்து எடுக்கப்படும் அத்திவரதர் சிலையை கடந்த ஜூலை 1-ம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். வரும் 17-ம் தேதி அத்திவரதர் சிலை மீண்டும் தெப்பக்குளத்துக்குள் வைக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, அத்திவரதர் சிலையை மேலும் 48 நாட்களுக்கு தரிசனத்துக்காக வைக்கவேண்டும் எனக் கோரி ஸ்ரீவைஷ்ணவ ராமானுஜ சபா தலைவர் சென்னை ஐகோர்ட்டில் முறையீடு செய்தார்.
அந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி பி.டி.ஆதிகேசவலு, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிப்பது பற்றி அரசுதான் முடிவு செய்ய வேண்டும். எனவே, அத்திவரதர் தரிசனத்தை நீட்டிக்க உத்தரவிட முடியாது என்றார்.