செய்திகள்
பீர்

மதுபான தொழிற்சாலைகளில் சோதனை - டாஸ்மாக் கடைகளில் ‘மது’ தட்டுப்பாடு

Published On 2019-08-13 09:47 GMT   |   Update On 2019-08-13 09:47 GMT
மதுபான தொழிற்சாலைகளில் வருமான வரி சோதனை நீடித்து வருவதால் மதுக்கடைகளில் மதுபாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
சென்னை:

தமிழகத்தில் உள்ள ‘டாஸ்மாக்’ கடைகளுக்கு 11 மதுபான தொழிற்சாலைகளில் இருந்து பிராந்தி, விஸ்கி, ரம், பீர் உள்பட பல்வேறு வகை மதுபானங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது.

கடந்த 6-ந்தேதி காஞ்சிபுரம் உள்பட 2 இடங்களில் செயல்படும் மதுபான தொழிற்சாலைகளில் வரி ஏய்ப்பு தொடர்பாக வருமானவரி அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சென்னை தியாகராய நகரில் உள்ள மதுபான ஆலை நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்பட 55 இடங்களில் இந்த சோதனை நடத்தப்பட்டது.

இதில் பலகோடி ரூபாய் வருவாயை கணக்கில் காட்டாமல் மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுவரை ரூ.1120 கோடிக்கு மேல் வரி ஏய்ப்பு செய்து சொத்துக்கள் வாங்கியது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வருமான வரி சோதனை நீடித்து வரும் நிலையில் ஆலையில் மது உற்பத்தி தடைபட்டதால் டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில்களை அனுப்புவதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் மதுக்கடைகளில் பிராந்தி, விஸ்கி, பீர் போன்ற மதுபாட்டில்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி கடைக்காரர்கள் கூறுகையில், வழக்கத்தை விட குறைவாகவே மதுபான பெட்டிகள் வருகிறது. உடனுக்குடன் அவை விற்று வருவதால் தட்டுப்பாடு நிலவுகிறது. விரைவில் இது சரியாகி விடும் என்றனர்.

Tags:    

Similar News