திருக்காட்டுப்பள்ளி அருகே டிரைவரை கத்தியால் குத்திவிட்டு மினிவேன் கடத்தல்
பூதலூர்:
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள சாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி (வயது 45). மினிலோடு வேன் வாடகைக்கு ஓட்டி வருபவர். இவரிடம் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வந்து தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளிக்கு போக வேண்டும் என்று கூறியுள்ளனர். டிரைவர் தண்டபாணியும் வண்டியில் அவர்கள் இரண்டு பேரையும் ஏற்றிக் கொண்டு கல்லணை வழியாக திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்துள்ளார்.
திருச்சினம்பூண்டி சுடுகாட்டின் அருகே வந்த போது மினிலோடு வேனில் வந்த இரண்டு பேரும் சேர்ந்து டிரைவரை கீழே தள்ளி கத்தியால் தலையில் குத்தி விட்டு வேனை எடுத்துக் கொண்டு தப்பிசென்று விட்டனர்.
அந்த வழியாக வந்த ஊர்க்காரர்கள் காயத்துடன் கிடந்த தண்டபாணியை மீட்டு திருக்காட்டுப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரிடம் இருந்த செல்போன் மூலம் முசிறியில் இருந்த உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் காயமடைந்த தண்டபாணியை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து முசிறி ஆலமரத்து பட்டியை சேர்ந்த சண்முககுமார் (49) என்பவர் தோகூர் போலீசில் புகார் செய்தார். தோகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கரிகாற்சோழன் வழக்குப்பதிவு செய்து மினிலோடு வேனை கடத்தி சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்.
இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சி திருவெறும்பூரில் இருந்து 2 பேர் காரை வாடகைக்கு எடுத்து திருக்காட்டுப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்த போது இடையிலேயே கார் டிரைவரை தாக்கி விட்டு காரை கடத்தி சென்று விட்டனர்.
அதனை தொடர்ந்து தற்போது மினி லோடு வேன் டிரைவரை தாக்கிவிட்டு வேனை கடத்தி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.