செய்திகள்
நமச்சிவாயம்

பாஜக அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம்- நமச்சிவாயம் அறிக்கை

Published On 2019-08-12 12:14 GMT   |   Update On 2019-08-12 12:14 GMT
சர்வாதிகார ஆட்சி நடத்தும் பா.ஜ.க. அரசை அப்புறப்படுத்த சோனியா தலைமையில் பாடுபடுவோம் என்று நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைவரையும் அரவணைத்து அன்பு காட்டும் அன்னை, காங்கிரஸ் பேரியக்கத்தை கட்டிக்காத்து வழிநடத்திய தியாகத்தலைவி சோனியாகாந்தியை மீண்டும் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக தேர்ந்து எடுத்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு புதுவை பிரதேச காங்கிரஸ் சார்பில் எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்து கொள்கிறேன்.

காங்கிரஸ் பேரியக்கத்திற்கு சோதனை வந்தபோதெல்லாம் தன்னுடைய சாதூரிய அரசியல் நெறியாள்கை மூலம் சாதனைகளாக மாற்றிக்காட்டிய சரித்திர தலைவி சோனியாகாந்தி. அன்னை சோனியாகாந்தி, இளம்தலைவர் ராகுல்காந்தி, அன்பு தலைவி பிரியங்காகாந்தி போன்ற மாபெரும் சக்திகள் ஒன்றிணைந்து காங்கிரஸ் பேரியகத்தை புதுப்பொலிவுடன் வழிநடத்தி வெற்றி பாதைக்கு அழைத்து செல்வார் என்கின்ற நம்பிக்கை எல்லோர் மனதிலும் எழுந்துள்ளது.

மதவாதத்தை தூண்டி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்த மக்கள் விரோத பாரதீய ஜனதாகட்சி ஆட்சியின் அவலங்களை அம்பலப்படுத்த ஜனநாயக குரல்வளையை நெரித்து சர்வாதிகார ஆட்சி செய்யும் பாரதீய ஜனதா அரசை நாட்டை விட்டு அப்புறப்படுத்த அன்னை சோனியா காந்தி தலைமை ஏற்று ஒன்றிணைந்து அனைவரும் பாடுபடுவோம்.

சமதர்ம சமத்துவ இந்தியாவை உருவாக்கி அனைத்து தரப்பு மக்களையும் அன்னைசோனியா காந்தி பாதுகாப்பார் என்ற நம்பிக்கை தற்போது எல்லோருக்கும் ஏற்பட்டு உள்ளது. அன்னை சோனியாகாந்தி காட்டும் பாதையில் பயணித்து காங்கிரஸ் பேரியக்கத்தை கண் துஞ்சாது புதுவை பிரதேச காங்கிரஸ் என்றென்றும் காத்து நிற்கும்.

இவ்வாறு நமச்சிவாயம் அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News