செய்திகள்
கொள்ளையர்களுடன் போராடும் வயதான தம்பதியினர்.

கொள்ளையர்களுடன் துணிச்சலாக போராடிய வயதான தம்பதி

Published On 2019-08-12 11:57 GMT   |   Update On 2019-08-13 08:07 GMT
நெல்லை மாவட்டம் கடையம் அருகே கொள்ளையர்களிடம் இருந்து தப்பிக்க வயதான தம்பதி போராடிய செயல் இளம்தலைமுறையினரை வியக்க வைத்துள்ளது.
கடையம்:

கடையம் அருகேயுள்ள கல்யாணிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி சண்முகவேலு. இவர் இரவு நேரத்தில் தனது வீட்டின் வெளியே நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது கொள்ளையர்கள் இருவர் முகமூடி அணிந்தபடி ஆயுதங்களுடன் நுழைந்துள்ளனர். அதில் ஒரு கொள்ளையன் முதியவரான சண்முகத்தின் கழுத்தை துணியால் நெரித்துள்ளார்.


அப்போது கீழே விழுந்த அந்த முதியவர் பின் சுகாரித்துக் கொண்டு திரைப்படங்களில் வரும் கதாநாயகர்கள் போன்று தாக்குதலில் ஈடுபட்டார். இந்த சத்தம் கேட்டு சண்முகவேலுவின் மனைவி செந்தாமரை வீட்டில் இருந்து வெளியே வந்துள்ளார். கொள்ளையடிக்க வந்த மர்மநபர்களுடன் கணவர் போராடுவதைக் கண்ட மனைவியும் கையில் கிடைத்த நாற்காலிகளை தூக்கி சரமாரியாக வீசினார். இத்தாக்குதல்களுக்கு இடையே கொள்ளையன் ஒருவர் செந்தாமரை அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்துள்ளான்.

கொள்ளையடிக்க வந்தவர்களிடம் இருந்து தப்பிக்க போராடியது மட்டுமின்றி அவர்களை மடக்கிப் பிடிக்கவும் முதியவர்கள் போராடினர். முதியவர்களின் செயலை கண்ட கொள்ளையர்கள் தப்பித்தால் போதும் என்று ஓடினர்.

இதுதொடர்பாக கடையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் முதியவர்களின் வீட்டில் இருந்த சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு தேடி வருகின்றனர்.

அரிவாள்களை கண்டும் பயப்படாமல் துணிச்சலுடன் கொள்ளையர்களை எதிர்கொண்டு போராடிய முதியவர்களின் செயல் அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. 
Tags:    

Similar News