மோட்டார் மூலம் குடிநீர் திருடுவதை கண்டித்து காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
வடமதுரை:
வடமதுரை பகுதி மக்களுக்கு காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இது 2 நாட்களுக்கு ஒரு முறை வினியோகம் செய்யப்படும். ஆனால் கடந்த சில நாட்களாக குடிநீரை மின் மோட்டார் மூலம் சிலர் திருடி வருகின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அப்பகுதி மக்கள் காலிக் குடங்களுடன் தண்ணீர் தேடி தனியார் தோட்டங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே மின் மோட்டார் மூலம் தண்ணீர் திருடும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குடங்களுடன் வடமதுரை - தென்னம்பட்டி சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் வடமதுரை போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் அதிகாரிகளிடம் செல்போன் மூலம் பேசி சம்மந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.