செய்திகள்
தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தை விருதுகள் வழங்கும் விழா இன்று மாலை நடக்கிறது

Published On 2019-08-08 06:31 GMT   |   Update On 2019-08-08 06:31 GMT
சென்னை தேனாம்பேட்டையில் விடுதலை சிறுத்தை விருதுகள் வழங்கும் விழா திருமாவளவன் தலைமையில் இன்று மாலை நடைபெறுகிறது.
சென்னை:

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் சான்றோர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான விழா இன்று (8-ந் தேதி) மாலை 4 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கத்தில் நடைபெறுகிறது.

விருதுகள் வழங்கும் விழா கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் நடக்கிறது. மாநில பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வரவேற்கிறார். மாநிலபொதுச்செயலாளர் துரை ரவிக்குமார் எம்.பி. முன்னிலை வகிக்கிறார்.

இந்துராமிற்கு அம்பேத்கர் சுடர் விருதும், வி.ஐ.பி.கோ. விஸ்வநாதனுக்கு பெரியார் ஒளி விருதும், அயோத்தி தாசன் விருது மா.நாகப்பனுக்கும், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்சுக்கு காமராஜர் விருதும் வழங்கப்படுகிறது.

காயிதே மில்லத் பிறை விருது செ.திவானுக்கும், செம்மொழி ஞாயிறு விருது நல்லி நா.குப்புசாமிக்கும் திருமாவளவன் வழங்கி கவுரவிக்கிறார். விருதுகளுடன் பொற்கிழியும் வழங்கப்படுகிறது.

இந்த விழாவில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் மட்டுமின்றி தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கலந்து கொள்கிறார்கள். விழாவினை கட்சியின் தலைமை நிலைய பொறுப்பாளர்கள், மாவட்ட செயலாளர்கள் ஒருங்கிணைக்கிறார்கள்.
Tags:    

Similar News