செய்திகள்
மழை நிலவரம்

நீலகிரி, கோவையில் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு- மீனவர்களுக்கு எச்சரிக்கை

Published On 2019-08-08 03:37 GMT   |   Update On 2019-08-08 03:37 GMT
நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் நாளை வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
புதுடெல்லி:

தென்மேற்கு பருவமழை கர்நாடகா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் தீவிரம் அடைந்து இருக்கிறது. இதன் தாக்கம் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 

குறிப்பாக தமிழகத்தின் நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இன்றும் பல்வேறு பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. 

நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 82 செமீ மழை பெய்துள்ளது. நேற்று முன்தினம் 41 செமீ மழை பெய்திருந்த நிலையில் இன்று அதைவிட இரண்டு மடங்கு அதிக மழை பெய்துள்ளது. 

இதற்கிடையே வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மணிக்கு 40 கிமீ முதல் 50 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது. 

நீலகிரி மற்றும் கோவையில் நாளை வரை மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை மையமும் எச்சரித்துள்ளது. மேலும் 10ம் தேதி நீலகிரி மற்றும் கோவை மாவட்டஙகளல் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறி உள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News