புறா பிடிக்க சென்ற போது மின்சாரம் தாக்கி பிளஸ்-2 மாணவர் பலி
கோவை:
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பெருமாள் லே-அவுட்டை சேர்ந்தவர் சகாயராஜ். டிரைவர். இவரது மகன் ஜோசப் (வயது 17). இவர் காரமடையில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.
சம்பவத்தன்று பள்ளி முடிந்து வீட்டுக்கு திரும்பிய ஜோசப் விளையாடுவதற்காக வெளியே சென்றார். அப்போது அந்த பகுதியில் உள்ள ஆலயத்தில் புறா இருப்பதை பார்த்தார். அந்த புறாவை பிடிப்பதற்காக எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல் ஆலய மேற்கூறை மீது ஏறினார்.
அப்போது அந்த வழியாக சென்ற மின்சார வயரை ஜோசப் தொட்டார். கண்இமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது.
இதில் அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக ஜோசப்பை மீட்டு கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் ஜோசப் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.