செய்திகள்
அமைச்சர் வேலுமணி

மழை நீர் சேகரிப்பை வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம் - அமைச்சர் வேலுமணி

Published On 2019-08-06 08:55 GMT   |   Update On 2019-08-06 08:55 GMT
தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் மழை நீர் சேகரிப்பை வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம் என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை:

உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

இறைவன் கொடுத்த கொடை மழை, அந்த மழை நீரை சேகரிப்பது மிகமிக அவசியம். அம்மா அரசை வழி நடத்தும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தி உள்ளார்.

200 சதுரடி கொண்ட ஒரு வீட்டில் முறையாக மழை நீரை சேகரித்தால் ஒரு குடும்பம் 1 ஆண்டுக்கு தேவையான மழை நீரை சேமிக்கலாம். தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இனிமேல் பெய்யும் ஒரு துளி மழை நீரை கூட வீணாக்க கூடாது. இதை நாம் சவாலாக வீட்டுக்கு வீடு செயல்படுத்துவோம்.

மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர்களும், மக்கள் மேல் அக்கறை உள்ளவர்களும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தை உணர்த்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News