குன்னூர் அருகே ஊருக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம்
ஊட்டி:
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே மூப்பர்காடு கிராமத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். அங்கு கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.
இதையடுத்து இந்த கிராமத்திற்கு வெள்ளியங்காடு, முள்ளி, கெத்தை, பரளிக்காடு உள்ளிட்ட வனப்பகுதிகளில் இருந்து உணவு மற்றும் குடிநீரை தேடி காட்டு யானைகள் குட்டியுடன் வர தொடங்கியுள்ளன. இதனால், அக்கிராம மக்களின் அச்சத்தில் உறைந்துள்ளனர். மேலும், வனத்தில் இருந்து வரும் குடிநீர் குழாய்களை காட்டுயானைகள் உடைத்து சேதப்படுத்தியுள்ளன.
இந்த காட்டு யானைகளின் அட்டகாசத்தால் இங்கு வசித்து வரும் மாணவர்கள் பள்ளி செல்ல முடியவில்லை. மேலும் வேலைக்கு செல்லபவர்களும் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். எனவே, வனத்துறையினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.