வடமதுரை வாலிபர் கொலை ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கைது
வடமதுரை:
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொல்லப்பட்டியைச் சேர்ந்த பெருமாள் மகன் மணிகண்டன் (வயது 26). பெருமாளுக்கும், அவரது தம்பி திருப்பதி என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக தகராறு இருந்து வந்துள்ளது.
நேற்று பெருமாள் மற்றும் திருப்பதிக்கு இடையே ஏற்பட்ட தகராறை மணிகண்டன் தடுக்க முயற்சித்தார். அப்போது திருப்பதி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மணிகண்டனை குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பெருமாளுக்கும் காயம் ஏற்பட்டது.
இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். போலீசார் விசாரணையில் பெருமாளின் மகள் சரண்யா கடந்த சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்திருந்தார். இந்த திருமணத்துக்கு திருப்பதியின் குடும்பத்தினரே காரணம் என பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர் சந்தேகப்பட்டு வந்தனர்.
ஏற்கனவே சொத்து தகராறும் இருந்ததால் தனது அண்ணனை தாக்க முயன்ற போது தடுக்க வந்த மணிகண்டன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து திருப்பதி (50), அவரது மனைவி புகழேந்தி (40), மகன்கள் சவடமுத்து (20), முனீஸ்வரன் (19) ஆகிய 4 பேர்களையும் போலீசார் கைது செய்து வேடசந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.