புதிதாக மதுக்கடை திறக்க எதிர்ப்பு - பெண்கள் போராட்டம்
திருவொற்றியூர்:
மணலி புதுநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி- 2, மற்றும் காந்திநகர் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு புதிதாக மதுக்கடை திறக்க டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் புதிய கடை திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன. கடந்த 2 நாட்களுக்கு முன்பு அந்த கடையில் மதுபாட்டில்கள் விற்பனைக்காக நிரப்பப்பட்டன.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் அங்கு வந்தனர். அவர்கள் மதுக்கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர்.
மணலிபுதுநகர் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதுபற்றி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.