கத்தியால் வெட்டி நகை பறித்த கொள்ளையனை மடக்கி பிடித்த பெண்
பூந்தமல்லி:
பூந்தமல்லியை அடுத்த காட்டுப்பாக்கம், ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி தனலட்சுமி சினிமா துறையில் வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு அவர் செந்தூர்புரம் மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடைக்கு சென்விட்டு நடந்து வந்தார். விஜயலட்சுமி நகர் அருகே வந்த போது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம வாலிபர் திடீரென தனலட்சுமி அணிந்து இருந்த நகையை பறிக்க முயன்றான்.
அதிர்ச்சி அடைந்த தனலட்சுமி கொள்ளையனை மடக்கி பிடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கொள்ளையன் சிறிய கத்தியால் தனலட்சுமியின் கையை கிழித்தான்.
எனினும் அவர் கொள்ளையனை தப்பிக்க விடாமல் பிடித்து கூச்சலிட்டார். சத்தம் கேட்டு திரண்ட அப்பகுதி மக்கள் கொள்ளையனை சுற்றி வளைத்து தர்மஅடி கொடுத்தனர். பின்னர் அவனை பூந்தமல்லி போலீசில் ஒப்படைத்தனர்.
விசாரணையில் பிடிபட்ட கொள்ளையன் அய்யப்பன்தாங்கல் இந்திரா நகரை சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிந்தது. அவர் இதுபோல் வேறு எந்த நகை பறிப்பிலும் ஈடுபட்டு உள்ளாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கொள்ளையன் தாக்கியதில் காயம் அடைந்த தனலட்சுமிக்கு கையில் 5 தையல் போடப்பட்டது.