செய்திகள்
புதுச்சேரி முதல் அமைச்சர் நாராயணசாமி

இணையதள புகார்களின் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் - நாராயணசாமி அறிவுரை

Published On 2019-07-27 10:21 GMT   |   Update On 2019-07-27 10:21 GMT
இணையதளம், சமூக வலைதளம் தொடர்பான புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி:

கோரிமேடு ஒருங்கிணைந்த போலீஸ் கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள சைபர் கிரைம் ஆய்வகம், ஒருங்கிணைந்த போக்குவரத்து மேலாண்மை கண்காணிப்பு பிரிவு, போலீஸ் கெஸ்ட் அவுஸ் ஆகியவற்றை முதல்-அமைச்சர் நாராயணசாமி திறந்து வைத்து போலீசாரின் குறைகளை கேட்டறிந்தார்.

தொடர்ந்து சைபர் கிரைம் தொடர்பாக கலந்துரையாடல் நடந்தது. சைபர் கிரைம் செயல்பாடு தொடர்பாக போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர் பவர்பாய்ண்ட் மூலம் விளக் கினார்.

கூட்டத்தில் முதல்-அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:-

மாநிலத்தில் வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. சமூக வலைதளங்களில் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், சமூக அந்தஸ்தில் உள்ளவர்கள்,பெண்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கருத்துக்கள் பதிவிடுகின்ற னர்.

இதுதொடர்பாக சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை என புகார் உள்ளது. இணையதளம், சமூக வலைதளம் தொடர்பான புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்வைப் மிஷின்கள் மூலம் வங்கி வாடிக்கையாளர்களின் தகவல்களை திருடி போலி ஏ.டி.எம். கார்டு தயாரித்து பணத்தை அபகரித்த வழக்கில் புதுவை போலீஸ், இந்தியாவிற்கே முன்மாதிரியாக செயல்பட்டது. அதேபோல சமூக வலைதள புகார்களையும் அணுக வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதைத்தொடர்ந்து டி.ஜி.பி. சுந்தரிநந்தா கூறியதாவது:-

சைபர் கிரைம் பிரிவு தொடங்கியபோது போதிய பயிற்சி இல்லாததால் இந்த தேக்க நிலை ஏற்பட்டது. தற்போது 53 போலீஸ் அதிகாரிகளுக்கு ஐதராபாத் உள்ளிட்ட பெருநகரங்களில் பயிற்சி அளித்துள்ளோம். இன்னும் 100 பேருக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.

சைபர் கிரைம் பிரிவுக்கு சக்திவாய்ந்த மென்பொருள் வாங்கவும் முடிவு செய்துள்ளோம். இதன்மூலம் தீவிரவாதிகளின் சைபர் கிரைம் தாக்குதல், பொருளாதார சைபர் கிரைம் குற்றங்கள் அனைத்தையும் போலீசார் திறமையாக கையாள்வர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News