திருவாரூரில் ஹைட்ரோ கார்பனுக்கு எதிராக போராட்டம் நடத்திய 770 பேர் மீது வழக்குப்பதிவு
திருவாரூர்:
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களை விவசாயிகள் பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அனைத்து விவசாயிகளையும் ஒன்றி ணைத்து காவிரி படுகை பாதுகாப்பு கூட்டமைப்பு என்ற அமைப்பை தொடங்கி தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட 8 மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக் கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி காவிரிப்படுகை கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாசிலாமணி, 30 பெண் விவசாயிகள் உள்பட 770 விவசாயிகள் மீது திருவாரூர் தாலுகா போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.