செய்திகள்
சென்னை ஐகோர்ட்

தபால் துறை தேர்வை ரத்து செய்ததற்கு நிர்வாக காரணங்கள் என்ன? - ஐகோர்ட்டு கேள்வி

Published On 2019-07-23 08:18 GMT   |   Update On 2019-07-23 08:18 GMT
தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் குறித்து விரிவான ஆவணங்களுடன் பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.
சென்னை:

தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இதில் உள்ள கேள்விகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.

இதை எதிர்த்து திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் முன் விசாரணைக்கு வந்தபோது, தபால் துறை தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வாதங்களை கேட்ட நீதிபதிகள், வருங்காலங்களில் தபால் துறை நடத்தும் தேர்வுகளில் தமிழ் மொழியும் தேர்வு மொழியாக இருக்குமா? என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தனர்.



இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்தபோது, தபால் துறை சார்பில் இரண்டு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. அதை படித்து பார்த்த நீதிபதிகள், பிராந்திய மொழி தெரிந்திருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே தவிர பிராந்திய மொழியில் தேர்வு நடத்தப்படும் என கூறப்படவில்லை என சுட்டிக்காட்டினர்

மேலும் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராகி, அனைத்து தபால் துறை தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், தேர்வை எப்படி நடத்துவது? என்பது குறித்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாகவும், அது தொடர்பாக விரிவான பதில் மனுவை தாக்கல் செய்வதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து தபால் துறை தேர்வு அறிவிப்பாணைகளை ரத்து செய்ததற்கான நிர்வாக காரணங்கள் என்ன? என்பது குறித்து ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 5-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags:    

Similar News