செய்திகள்
ஹைட்ரோகார்பன் திட்டம் வேண்டாம்- புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதுச்சேரி:
ஹைட்ரோ கார்பன் திட்டத்தைக் கண்டித்து தமிழகம், புதுவையில் தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. புதுவையில் சமீபத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டார்.
அப்போது அவர் பேசும்போது, எக்காரணத்தை கொண்டும் மக்களுக்கு எதிரான எந்த திட்டத்தையும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றும், சட்டசபை கூட்டத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றும் கூறியிருந்தார்.
அதன்படி, ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக புதுச்சேரி சட்டசபையில் இன்று தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஹைட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்யக் கோரும் தீர்மானத்தை முதல்வர் நாராயணசாமி முன்மொழிந்தார். பின்னர் அந்த தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டது.